ஹைதராபாத் வெங்கல்ராவ்நகர் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர் ஒருவரும் மின் தொழிலாளியும் சேர்ந்து, பெண்மணியின் குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 23 வயதான திருமணமான இளம்பெண், தன் கணவருடன் ஜவஹர் நகர் பகுதியைச் சேர்ந்த அசோக் யாதவ் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார்.

அக்டோபர் 4 ஆம் தேதி குளியலறை பல்ப் வேலை செய்யவில்லை என்று பெண் புகார் செய்தபோது, வீட்டின் உரிமையாளர் ஒரு மின் தொழிலாளி சிந்துயை அனுப்பியிருந்தார். சில நாட்கள் கழித்து, அக்டோபர் 13 அன்று, அந்தப் பெண்ணின் கணவர் பல்ப் ஹோல்டரில் சற்று தளர்ந்த ஸ்க்ரூவை கவனித்தார்.

டார்ச்சின் ஒளியில் பார்த்தபோது, அதன் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமரா ஒன்று இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதனைப் பற்றி அசோக் யாதவிடம் கேட்டபோது, அவர் பொறுப்பை மறுத்ததுடன், போலீசில் புகார் செய்ய வேண்டாம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

உடனே மது்ராநகர் போலீசில் தம்பதியினர் அளித்த புகாரின் பேரில், வீட்டு உரிமையாளர் அசோக் யாதவ் மற்றும் மின் தொழிலாளி சிந்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்; மின் தொழிலாளி தற்போது போலீசுக்கு தப்பி ஓடிவருவதாக தகவல்.

இதேபோல், கடந்த மார்ச் மாதத்திலும் தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு மாணவி விடுதியில், சார்ஜரில் மறைத்து வைக்கப்பட்ட உளவு கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.