கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணாமலை கடை 17-வது வார்டு கவுன்சிலராக ஷீஜா குமாரி என்பவர் உள்ளார். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட விரிகோடு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சீராக இல்லை எனவும், சாலை பராமரிப்பு பணிகள் செய்யாததை கண்டித்தும் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த பேரூராட்சி தலைவர் பமலா அலுவலகத்திற்கு சென்று கவுன்சிலர் ஷீஜா குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அப்போது பமலா கூறும்போது, கவுன்சிலர் ஷீஜா குமாரி குறிப்பிட்டுள்ள பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் மோட்டார் பழுதாக இருப்பதால் சரியாக குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. தற்போது பழுது சரி செய்யப்பட்டதால் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்த பிறகு சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என பேரூராட்சி தலைவர் கூறியுள்ளார். கவுன்சிலர் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.