ஈரோடு கால்நடை மருத்துவமனை ரோடு பகுதியில் கவின்ராஜ்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் வினோத்குமார்(17) இன்ஜினியரிங் கல்லூரியில் சேர உள்ளார். நேற்று நண்பர்கள் இருவரும் வள்ளிபுரத்தான் பாளையம் பகுதிக்கு சென்ற கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டனர். இதனையடுத்து இரவு 7.30 மணிக்கு இருவரும் ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஈரோடு- பெருந்துறை ரோடு வேப்பம்பாளையம் பிரிவு அருகே வைத்து கோவை நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவின்ராஜ் உயிரிழந்தார். வினோத்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.