கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டியில் உள்ள தனியார் “அமெட்” கடல்சார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்படும் உடற்பயிற்சியில் பிரசாந்த் ஈடுபட்டார். அப்போது திடீரென ரத்த வாந்தி எடுத்த பிரசாந்தை கேளம்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் உயிரிழந்தார்.

இதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், பிரசாந்தின் மரணத்திற்கு நியாயம் கேட்டும் சக மாணவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் கல்லூரிக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கல்லூரி நிர்வாகம் பயிற்சியாளர் புருஷோத்தமனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.