கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை மேட்டுக்கடை பாப்புலர் சாலையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஷிமா என்ற மனைவியும், சபீக் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று காலை சாகுல் ஹமீது தொழுகைக்காக மசூதிக்கு சென்று விட்டார். வீட்டின் மேல் தளத்தில் ராஷிசமாவும், சபீக்கும் தூங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்து பயங்கர புகைமூட்டம் வெளியே வந்ததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சத்தம் போட்டனர். இதனால் தூங்கி கொண்டிருந்த ராஷிமாவும், சபீக்கும் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை உடனடியாக அப்புறப்படுத்தினர். பின்னர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனையடுத்து அறையை ஆய்வு செய்தபோது மின் கசிவு காரணமாக ப்ரிட்ஜ் வெடித்து எரிந்ததால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.