தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரத்தில் கவின் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் அருகே இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துவிட்டு தர்மபுரியில் டாக்டராக இருக்கிறார். அதே கல்லூரியில் படித்த பெண்ணை கவின் காதலித்து வந்துள்ளார். தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜகுலம் பகுதிக்கு சொகுசு காரில் சென்ற கவின் குளக்கரை அருகே தனது காரை நிறுத்திவிட்டு செல்போனில் காதலியுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் கவின் தனக்கு சொந்தமான 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டார். இதற்கிடையே கார் ஒன்று தீப்பிடித்து எரிவதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.