கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற முயன்று ஒருவர் பின் ஒருவராக 4 பேரும் நீரில் மூழ்கினர். கதவணையை  சுற்றி பார்க்க வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய மாணவிகளை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 4 மாணவிகளில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. தொடர்ந்து  ஒருவரை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், அவரது உடலும் மீட்கப்பட்டது.

அதாவது, தொட்டியத்தில் உள்ள கல்லூரியில் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக உடற்கல்வி ஆசிரியர் உதவியுடன் புதுக்கோட்டை விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 13பேர் வந்திருந்தனர்.. இதில் 4 பேர் பலியாகி உள்ளனர்.. போட்டி முடிந்து திரும்பும் போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பலியான 4 மாணவிகளும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள். மீட்கப்பட்ட 4 மாணவர்களின் உடலும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

இந்நிலையில் ஆற்றில் இறங்கிய மாணவிகள் 4 பேரும் புதைகுழியில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கதவணை பகுதியில் மணல் அதிகமாக அள்ளப்பட்டதால் புதைகுழி உருவானது. இதனால் கதவனைப் பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, பலகை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் என்பதால் புதைகுழி பற்றி அவர்களுக்கு தெரியவில்லை..

இதுகுறித்து இலுப்பூர் கோட்டாட்சியர் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு போட்டிக்கு தான் அனுமதி கொடுத்துள்ளனர் . ஆனால் அதனை கடந்து எவ்வாறு அணைக்கு போனீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளனர்.. பெற்றோர்கள் உட்பட ஒட்டுமொத்த கிராம மக்களும்   குழந்தைகளை பறிகொடுத்து கண்ணீரில் தவிக்கின்றனர். அவர்கள் கவனக்குறைவால் தான் இந்த சம்பவம் நடந்ததாக தங்களது ஆதங்கத்தை ஆசிரியர்களிடம்  வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் மாணவிகளின் பெற்றோர்கள் கண்ணீருடன் தரையில் புரண்டு அழும் காட்சி நெஞ்சை துளைக்கிறது.

இதுகுறித்து இலுப்பூர் டிஎஸ்பி காயத்ரி, இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. கிராமத்தில் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். கிராமமும் ஒட்டுமொத்தமாக வேதனையில் தவிக்கிறது.. போட்டிக்காக அழைத்து செல்லும்போது கல்லூரியிலேயே பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.  அதனைவிட்டு விட்டு  ஆற்றிற்கு கூட்டி செல்லும்போதுதான் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கரூர் அருகே குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  எதிர்பாராத விதமாக 4 மாணவிகள் சுழலில் சிக்கி உயிரிழந்த துயரமான செய்தி கேட்டு வேதனையடைந்தேன். உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்