ஈரான் நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், அந்த நாட்டின் ராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உச்ச தலைவர் அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய ராணுவத் தலைமைகளும் அழிக்கப்பட்டிருப்பது மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானிய அரசுத் தொலைக்காட்சியை மேற்கோள் காட்டி ‘அசோசியேட்டட் பிரஸ்’ வெளியிட்டுள்ள செய்தியின்படி: ஈரானிய ராணுவத் தளபதி ஜெனரல் அப்துல் ரஹீம் மௌசவி, பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அஜீஸ் நசீர்சாதே ஆகியோர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஏற்கனவே, புரட்சிகர காவல்படையின் தலைவரும் பாதுகாப்பு ஆலோசகருமான அலி ஷம்கானி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அடுத்தடுத்த முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளது ஈரானை நிலைகுலையச் செய்துள்ளது.
ஈரானின் பதிலடித் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், “ஈரான் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையாகத் தாக்கப் போவதாகக் கூறி வருகிறது. அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது. மீறித் தாக்கினால், உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய வலிமையுடன் அமெரிக்கா பதிலடி கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு திருப்புமுனையாக இது அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச தலைவர் கமேனியின் கொலைக்குப் பழிவாங்கப்போவதாகச் சபதம் செய்துள்ள ஈரான், இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடுத்தது. பஹ்ரைன், குவைத், கத்தார் ஆகிய பகுதிகளில் உள்ள அமெரிக்க நிலைகளை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தடுத்தன. துபாய் வான்பரப்பில் ஏவுகணைகள் வெடித்துச் சிதறியதால் ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் தீ விபத்துகள் ஏற்பட்டன. சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் நாடுகளும் தங்கள் எல்லைக்குள் வந்த ஏவுகணைகளை இடைமறித்தன. டெல் அவிவ் பகுதியில் விழுந்த ஏவுகணைத் துகள்களால் இஸ்ரேலியப் பெண் ஒருவர் உயிரிழந்ததாக மீட்புப் பணிகள் தெரிவித்துள்ளன.
இந்த மோதல் ஒரு பிராந்தியப் போராக உருவெடுத்துள்ளதால், உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக, எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட வாய்ப்புள்ளது.
