கோவை மாவட்ட பா.ஜ.க சார்பாக வெள்ளலூரில் இன்று நம்ம ஊர் பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அங்கு அவர் பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்துள்ளார். மேலும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் அங்கு நடத்தப்பட்டது. இந்நிலையில் பெண்கள், ஆண்கள் ஒன்றிணைந்து பாடல் பாடி கும்மி அடித்து மகிழ்ந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து நடிகை குஷ்பூவும் கும்மி அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்து சிறிது நேரம் ரேக்ளா வண்டியிலும் பயணம் செய்துள்ளார்.

இதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது, பொங்கல் பண்டிகை நம்முடைய பாரம்பரியமான பண்டிகையாகும். இந்த பண்டிகை குடும்பத்திலும், வீட்டிலும் மிகவும் சந்தோஷம் கொடுக்கக்கூடிய பண்டிகையாகும். இதனை நான் இங்கு உள்ள மக்களுடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடி இருக்கிறேன். பொங்கல் பரிசாக மக்களுக்கு தமிழக அரசு ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுப்பது வெட்கக்கேடானது. தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பதாக கூறிவரும் தி.மு.க அரசு இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளக் கூடாது.

மேலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டது அவரது கட்சியின் தனிப்பட்ட உரிமையாகும். அதில் யாராலும் கருத்து சொல்ல முடியாது.  பா.ஜ.க-வில் இருக்கும் எல்லா பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது. நானும் கட்சியில் தானே இருக்கிறேன். தற்போதைய தலைவர் அண்ணாமலை துணிச்சலான பல முடிவுகளை மேற்கொண்டு வருகிறார். அவரை நான் பாராட்டுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.