தமிழக அரசு மாநிலத்தில் வசித்து வரும் மக்களுக்கு மக்கள் ஐடி என்னும் தனித்துவ அடையாள எண்ணை வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் சமீபத்திய டெண்டர் அறிவிப்பின்படி, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் ஐடி என்னும் பெயரில் 12 இலக்க எண் வழங்கப்பட இருப்பதும், இதன் மூலமாக அனைத்து சேவைகளையும் வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையான தொடர்புக்கு மட்டுமே மக்கள் ஐடி பயன்படுத்தப்பட உள்ளது என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலமாக இதில் வெளிப்படை தன்மை இல்லாத நிலை உருவாகியுள்ளது.  இது குறித்து தமிழக அரசு தரப்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும் ஏற்கனவே அனைத்து சலுகைகளும் ஆதார் எண் பயன்படுத்தி வருகின்ற நிலையில் தற்போது மக்கள் ஐடி திட்டம் எதற்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு மாநிலமும் இப்படி தனி அடையாள என் வழங்க முன் வந்தால் நாட்டின் குழப்பம் ஏற்படாதா? அதனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக தமிழக மக்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டும். அதே நேரம் வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் வருகையை வரைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர்களின் கணக்கெடுப்பு நடத்திய பின் மக்கள் ஐடி திட்டங்களை வெளிப்படை தன்மையோடு தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.