மதுரை மாவட்டத்தில் உள்ள சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை அமைந்துள்ளது. அந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் எந்திரங்களை பணம் நிரப்பும் பொறுப்பும் சுரேஷிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுரேஷ் தான் வேலை பார்க்கும் பகுதியில் மனைவி மற்றும் சகோதரி பெயரில் போலியான நகைகளை அடகு வைத்து 8 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளார்.

மேலும் ஏடிஎம் எந்திரங்களில் வங்கி சார்பில் வைக்க வேண்டிய 39 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் பணத்தை மனைவி மற்றும் சகோதரியின் வங்கி கணத்திற்கு மாற்றி மோசடி செய்துள்ளார். அந்த பணத்தை சுரேஷ் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு லட்சுமணன், சுமதி ஆகியோர் உதவி செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சுரேஷ், லட்சுமணன், சுமதி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.