மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதிக்க சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் நாளை (8.12.2023) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மாணவர்களின் நலன்கருதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (08.12.2023) 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 2 தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 வட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.