தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மகிமைபுரம் பூண்டி புது தெருவில் அடைக்கல சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளையராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் ராணுவ பாட்டாலியனில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்துள்ளார். இளையராஜாவுக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 2 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இளையராஜா நேற்று மதியம் தனது மனைவி சுகன்யா, அண்ணன் மகன்களான சூர்யா(18), ஹரிஷ்(12) ஆகியோருடன் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சூர்யாவும், ஹரிஷும் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளையராஜா 2 சிறுவர்களையும் மீட்டு கரைக்கு செல்ல முயன்றார். அதிர்ஷ்டவசமாக சிறுவர்கள் கரைக்கு வந்து விட்டனர். இதற்கிடையே இளையராஜா தண்ணீரில் மூழ்கி விட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இளையராஜாவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.