கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளான முஜாஹித், சிக்கந்தர் ஆகிய இருவரும் மஞ்சள் விற்பனை செய்வது தொடர்பாக காரில் ஈரோட்டுக்கு வந்தனர். அந்த காரை நாசீர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குய்யனூர் பிரிவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் நாசீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிக்கந்தர், முஜாஹித் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.