ஏழை, நடுத்தர மக்களை பற்றி சிந்திக்காமல் செயல்படும் மத்திய, மாநில அரசுகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரிபுரா, நாகலாந்து, மேகலாயா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கடந்த மூன்று மாதங்களாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

சமையல் எரிவாயு மூலம் அடுப்பை எரிக்கும் பெண்களுக்கு இந்த விலைவாசி உயர்வு வயிற்றெரிச்சலை உண்டாகி இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார். சிலிண்டர் விலை ஏற்கனவே பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் மீண்டும் மீண்டும் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களின் தலைமீது சுமையை ஏற்றுவது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அன்றாட செலவினங்களையே எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர் என குறிப்பிட்டு இருக்கின்றார்.

தற்போது எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது அவர்கள் தலையில் விழுந்த பேரிடியாக அமைந்திருக்கின்றது என்றும் இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக இதுவரை நிறைவேற்றாமல் இருப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.