அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம் பார்னிகாட் பே கடற்பகுதியில் சனிக்கிழமை மாலை ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றது. 20 அடி நீளமுள்ள மிங்கே வகை திமிங்கலம் ஒன்று தண்ணீரின் ஆழம் குறைந்த பகுதியில் ஒரு சிறிய படகுடன் மோதியது. இந்த தாக்குதலில், அந்த படகு சற்று கவிழ்ந்த நிலையில், அதில் பயணித்த ஒருவர் திடீரென கடலில் விழுந்தார். அருகில் இருந்த மற்றொரு படகில் பயணித்தவர்கள் இந்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்தனர், அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு 50 நிமிடங்களுக்கு முன்பே, “ஒரு திமிங்கலம் அந்த பகுதியில் சுற்றிக்கொண்டு இருக்கிறது” என்ற தகவலை மெரீன் மேம்மல் ஸ்டிராண்டிங் சென்டர் பெற்றிருந்தது. கடல்சார் போலீசார் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், திமிங்கலம் ஒரு மணல் பரப்பில் சிக்கியிருந்ததால் அலை அதிகமாக இருந்த காரணத்தால் அதனை அணுக முடியவில்லை. திமிங்கலம் படகுடன் மோதியதில் காயமடைந்து பின்னர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

 

இந்த வீடியோவில், திமிங்கலம் படகை மோதி அதன் மேல் பாய்ந்ததை, அதன் தாக்கத்தில் ஒருவர் கடலில் விழுந்ததைப் பார்க்க முடிகிறது. அதிர்ஷ்டமாக, கடலில் வீசப்பட்ட பயணிக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தற்போது, திமிங்கலத்தின் இறப்புக்கு நேரடி காரணம் என்ன என்பது குறித்து மெரீன் மமல் ஸ்டிராண்டிங் சென்டர் மேலதிக விசாரணை செய்து வருகிறது.