நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைத் துறையின் முட்டுக்கட்டையால் பொங்கல் ரிலீஸில் இருந்து திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ள சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய அரசியல் காட்சிகள் மற்றும் சில முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து சென்சார் சான்றிதழ் வழங்க அதிகாரிகள் தாமதம் காட்டி வரும் நிலையில், திரையுலகினர் பலரும் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிலம்பரசன் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புள்ள விஜய் அண்ணா, பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை.

இதைவிடப் பெரிய புயல்களையெல்லாம் நீங்கள் துணிச்சலுடன் கடந்து வந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும்; ஜனநாயகன் வெளியாகும் நாளில்தான் உண்மையான திருவிழா தொடங்கும்” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக வெளியாகும் இப்படம் திட்டமிட்டு முடக்கப்படுவதாக ரசிகர்கள் கொதிப்படைந்துள்ள நிலையில், சிம்புவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.