ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய் வரை பெருமளவில் சம்பாதிக்கும் ஒரு ஐஐடி முன்னாள் மாணவர், தனது வருமான வரி செலுத்தத் தேவையான வெறும் பதினைந்தாயிரம் ரூபாயைக் கூட கையில் வைத்திருக்காமல் நண்பரிடம் கடன் வாங்கியுள்ள விவகாரம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. சமூக வலைதளத்தில் ஒரு பட்டயக் கணக்காளர் பகிர்ந்துகொண்ட இந்தத் தகவல், தனிநபர் நிதி மேலாண்மை குறித்து பலரையும் சிந்திக்க வைத்துள்ளதோடு பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர் கோடிகளில் சம்பாதித்தாலும், தனது வருமானம் முழுவதையும் பெருமளவில் ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து வாங்குவதிலேயே முதலீடு செய்துள்ளார். பல ஆடம்பரமான வீடுகளை வாங்கிவிட்டு, அவற்றுக்காக மாதந்தோறும் பெருமத்தொகையை வீட்டுக் கடனின் இஎம்ஐ-யாகச் செலுத்தி வருவதே இத்தகைய நெருக்கடிக்கு முக்கியக் காரணமாகும். கைக்கு வரும் சம்பளம் முழுவதும் கடன் அடைப்பதற்கே சரியாகச் சென்றுவிடுவதால், அவசரத் தேவைகளுக்கோ அல்லது சேமிப்பு கணக்கிலோ எந்தவித பணமும் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையை நிதி வல்லுநர்கள் ‘அசெட் ரிச், கேஷ் பூர்’ என்று வர்ணிக்கின்றனர்; அதாவது கையில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தாலும், அவசரத்திற்குப் பயன்படுத்தத் தகுந்த திரவ நிலையிலான ரொக்கம் இல்லாமல் தவிப்பதே இதன் அர்த்தமாகும்.

எவ்வித எதிர்பாராத செலவுகள் வந்தாலும் சமாளிக்கும் வகையில் கணிசமான தொகையைச் சேமிப்பாகப்  வைக்கத் தவறினால், எவ்வளவு பெரிய சம்பளம் வாங்குபவர்களுக்கும் இதே போன்ற பொருளாதாரச் சிக்கல்கள் வரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.