பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் படோரி ரயில் நிலையத்தில், தன் இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற ஒரு தாய் காட்டிய அசாத்திய துணிச்சல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. மூன்று பெண்கள் இரண்டு சிறு குழந்தைகளுடன் குறுக்கு வழியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக ஒரு அதிவேக ரயில் மிக அருகில் வந்துள்ளது.

பதற்றமான அந்தச் சூழ்நிலையில், சமயோசித புத்தியுடன் செயல்பட்ட அந்தத் தாய், சற்றும் தாமதிக்காமல் தனது இரண்டு குழந்தைகளையும் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள நடுப்பகுதியில் படுக்க வைத்துள்ளார். பின்னர், ரயிலின் சக்கரங்கள் குழந்தைகள் மீது படாமல் இருக்க, அவர்கள் மீது தான் குப்புறப் படுத்துக் கொண்டு பாதுகாத்துள்ளார்.

மற்ற இரண்டு பெண்களும் தண்டவாளத்திற்கு வெளியே தரையோடு தரையாகப் படுத்துக் கொண்டனர். சில நொடிகளில் ரயில் அவர்களைக் கடந்து சென்றதும், அங்கிருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து குழந்தைகளையும் பெண்களையும் மீட்டனர்.

அந்தத் தாயின் அசாத்திய முடிவால் குழந்தைகளுக்கு ஒரு சிறு கீறல் கூட ஏற்படாமல் அவர்கள் பத்திரமாக உயிர் தப்பினர். இருப்பினும், வேகமாகச் சென்ற ரயிலின் காற்று மற்றும் அடியினால் அந்தப் பெண் காயமடைந்தார்.

— Abhimanyu Singh (@Abhimanyu1305) May 15, 2026

“>

 

யாரோ ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்த இந்த நெஞ்சை உலுக்கும் காணொளி சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இவர்களின் அலட்சியத்திற்குச் சிலர் கண்டனம் தெரிவித்தாலும், மரண பயத்திலும் தன் உயிரைப் பணயம் வைத்து பிள்ளைகளைக் காத்த அந்தத் தாயின் தியாகத்தையும், வீரத்தையும் உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.