சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் “ரீல்ஸ்” கலாச்சாரம், தற்போது எல்லை மீறிப் போயுள்ளதை ராஜஸ்தானில் நடந்த இந்தச் சம்பவம் காட்டுகிறது.

அங்குள்ள ஒரு நபர், பைக் மீது அமர்ந்தபடி மிகச் சிறிய குழந்தைக்குப் புகைப்பிடிப்பதற்கும், பீர் கேனில் இருந்து மது அருந்துவதற்கும் கொடுக்கும் வீடியோ வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பச்சிளம் குழந்தை சிகரெட்டை இழுத்துவிட்டு இருமும் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், “இவன் என்ன மனிதனா? இல்லை மிருகமா?” என்று ஆவேசமாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோவில் அந்த பைக்கின் பதிவு எண் (RJ25 SS 8392) தெளிவாகத் தெரிவதால், சம்பந்தப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என ராஜஸ்தான் போலீசாருக்குப் புகார்கள் குவிந்து வருகின்றன.

ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் அடகு வைத்து இப்படியொரு வீடியோவை எடுத்த அந்த நபருக்கும், அதைத் தடுக்காமல் வீடியோ எடுத்த நபருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ரீல்ஸ் மோகத்தால் மனிதநேயம் மடிந்து வருவதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.