மும்பையின் பரபரப்பான குர்லா ரயில் நிலையத்தில், உரிய பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த இளம்பெண் ஒருவர், டிக்கெட் பரிசோதகரிடம் மல்லுக்கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே மேம்பாலத்தில் டிக்கெட் பரிசோதகர் ஜஸ்பால் ரத்தோர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அலுவலக உடை அணிந்திருந்த அந்த இளம்பெண் டிக்கெட் இன்றி பிடிபட்டார். அபராதம் செலுத்த மறுத்த அவர், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை அதிகாரி தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த அந்த பெண், ‘தவறான முறையில் என்னைத் தொடுகிறார்’ என்று கூச்சலிட்டு பொய்யான புகாரை கூறி நாடகமாடினார்.

ஒருகட்டத்தில் அதிகாரியின் சட்டையைப் பிடித்து இழுத்து அவர் ரகளையில் ஈடுபட்டது அங்கிருந்த பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் பெண் காவலர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பெண் ஆர்.பி.எஃப் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட அந்தப் பெண்ணுக்கு ரூ. 260 அபராதம் விதிக்கப்பட்டது. ‘தவறு செய்தவர் இப்போது பாதிக்கப்பட்டவர் போல் நடிக்கிறார்’ என சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.