உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள கிராஸிங்ஸ் ரிபப்ளிக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஓர் இளைஞர் கொடுமையான தாக்குதலுக்கு உள்ளான அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரித்தேஷ் என்ற அந்த இளைஞர், தன்னுடைய காதலியைச் சந்திக்கச் சென்றபோது, அந்தப் பெண்ணின் சகோதரரால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், இளைஞர் கம்பால் சரமாரியாக அடிக்கப்படுவதும், உதைக்கப்படுவதும், அத்துடன் வசைபாடப்படுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. காலையில் கல்லூரிக்குச் சென்ற ரித்தேஷ், சில மணி நேரத்திலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
गाजियाबाद में छात्र की लाठी डंडों से पिटाई…गर्लफ्रेंड से मिलने पहुंचा था युवक…वीडियो सोशल मीडिया पर हो रहा वायरल…पीड़ित की तहरीर पर मुकदमा दर्ज@Uppolice @ghaziabadpolice pic.twitter.com/ZK7iEJaF56
— Journalist Deepika singh (@Deepikasingh043) November 21, 2025
இதில், இளைஞர் ரித்தேஷுக்குக் கால் உட்பட பல இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். பாதிக்கப்பட்ட இளைஞரின் புகாரின் அடிப்படையில், கிராஸிங்ஸ் ரிபப்ளிக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவரின் சகோதரியுடன் ரித்தேஷ் காதலில் இருந்தது தெரியவந்தது. மேலும், முந்தைய நாள் இருவரும் சந்தித்துக் கொண்டதை அந்தப் பெண்ணின் சகோதரரும், தந்தையும் பார்த்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த சகோதரர், ரித்தேஷைத் வழிமறித்துத் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து வேவ் சிட்டி துணை ஆணையர் பிரியஶ்ரீ பால் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தகவல் கிடைத்த உடனேயே, சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்யப் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலதிக சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
