ரயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் அத்தியாவசியம் என்ற விதி இருந்தும், பலர் முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதைத் தொடர்கின்றனர். அப்படி ஒருவர் LTT–பனாரஸ் அதிவிரைவு ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் டிக்கெட் இல்லாமல் பயணித்த போது, அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் அவரை பொதுப் பெட்டிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.

 

ஆனால், அந்தப் பயணி தனது தவறை ஒப்புக்கொள்ளாமல், “நீங்கள் அபராதம் மட்டும் போடுங்கள்” என்று சர்வ சாதாரணமாகப் பதில் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டி.டி.இ., “நான் அபராதம் போட மாட்டேன், உடனடியாக வெளியேறுங்கள்” என்று திட்டவட்டமாக மறுத்து, அவரை வெளியேறுமாறு கண்டிப்பான தொனியில் கூறியது, அந்த 22 விநாடி வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, அன்றாட நாடகமாகப் பேசப்பட்டு வருகிறது. இது ஒரு சட்டவிரோதச் செயல் மட்டுமல்ல, அபராதம் மற்றும் சிறைத் தண்டனை போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் செயலாகும். பொதுவாக, டிக்கெட் இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணிப்பவர்களைப் பிடிக்கும் TTE-கள், அபராதம் விதித்து விட்டு, அவர்களை பொதுப் பெட்டிக்கு மாற்றுவது வழக்கம்.

ஆனால், இந்தப் பயணியின் பிடிவாதமான போக்கு காரணமாகவே விவகாரம் முற்றியுள்ளது. டி.டி.இ கடுமையான குரலில் பேசியபோது, அருகில் இருந்த ஒரு பயணி, “ஏன் மிரட்டும் தொனியில் பேசுகிறீர்கள்?” என்று குறுக்கிட்டுப் பேசியதால் நிலைமை மேலும் மோசமடைந்தது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் கண்ட ரயில்வே நிர்வாகம் உடனடியாகப் பதிலளித்து, “சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் PNR/UTS மற்றும் அலைபேசி எண்ணை அனுப்பவும்” என்று கூறியுள்ளது.

இதன் மூலம், இந்த விவகாரம் இப்போது சமூக ஊடக விவாதத்திலிருந்து அதிகாரப்பூர்வ நடவடிக்கைக்கு நகர்ந்துள்ளது உறுதியாகியுள்ளது.