ஆப்பிரிக்காவில் உள்ள ஓகாவாங்கோ டெல்டாவில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த சஃபாரி படகு மீது ஒரு பெரிய ஆண் யானை தாக்குதல் நடத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவில், யானைக் கூட்டத்தின் கண்களில் பயணிகளின் படகு பட்டதும், ஒரு ஆண் யானை கோபத்துடன் படகை நோக்கி வேகமாக ஓடி வருவது தெரிகிறது. பின்னர், அந்த யானை படகைத் தள்ளி, அதில் இருந்த பயணிகளை தண்ணீரில் விழ வைத்தது. இந்த தாக்குதலில் ஒரு பெண் பயணி மீது யானை தாக்க முயன்றாலும், அதிர்ஷ்டவசமாக அவர் சிறு காயங்களுடன் தப்பினார்.

இந்த சம்பவத்திற்கு காரணம், யானை தனது குடும்பத்தையோ அல்லது அருகில் இருந்த குட்டி யானையையோ பாதுகாக்க முயன்றதாக இருக்கலாம் என்று கன்சர்வேஷன் நேஷனல் பார்க்ஸ் (CNP) தெரிவித்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலர், “யானையின் குட்டி அருகில் இருந்ததால் தான் இப்படி தாக்கியிருக்கலாம்” என்று கருத்து தெரிவித்தனர். மற்றொருவர், “வனவிலங்குகளை மதித்தால், அவையும் நம்மை மதிக்கும்” என்று கூறினார். இந்த சம்பவம், வனவிலங்குகளுடன் பயணிக்கும்போது மிகவும் பயிற்சி பெற்ற வழிகாட்டிகளின் தேவையை எடுத்துக்காட்டுகிறது.