உத்தரகாண்ட் மாநிலத்தில், சபோர்டினெட் சர்வீசஸ் செலக்ஷன் கமிஷன் (UKSSSC) தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைக் கண்டித்து நூற்றுக்கணக்கான ஜென்-G இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்வை ரத்து செய்தல், வேலைவாய்ப்புகள் திரும்பப் பெறல் மட்டுமல்லாமல், ஊழலை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

 

இந்நிலையில், ஒரு மாணவி தர்ணாவில் பேசிய ஒரு தீவிரமான உரை, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்த வீடியோவில் உள்ள இளம்பெண், மிகவும் கோபமாக பேசுகிறார். இதில் மிகுந்த அதிர்வை ஏற்படுத்திய அவரது வார்த்தைகள்: “நேபாளிலும், வங்காளதேசத்திலும் நடந்தது இங்கேயும் நடக்கும்… இளைஞர்களை நாம் தாழ்வாக மதிப்பிடுகிறோம்.

ஒருநாள் இளைஞர்கள் நேபாள மாதிரி நிலை உருவாக்கினா, அந்த நேரத்துல உத்தரகாண்ட்ல மோசமான வானிலை இருந்தா, ஹெலிகாப்டர்ல கூட அரசியல்வாதிகள் பறக்க முடியாது.” இந்த உரையை, சிலர் பாராட்டும் போது, பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இளம்பெண்ணின் இந்த உரையை சிலர் நாட்டை பிரிக்க வைக்கும் “தீவிரவாத பேச்சு” எனக் குற்றம் சுமத்த, சிலர் மாணவர்களின் கோபத்தின் வெளிப்பாடாகவே இது அமைந்துள்ளது என வாதாடுகின்றனர். சமூக வலைதளங்களில் பயனர்கள் இரு பக்கமாகப் பிரிந்து வாதாடி வருகின்றனர்.