திருப்பூரில் தொழிலதிபரான தில்லை ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் ஆன்லைன் வர்த்தகத்தின் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

இதனை நம்பி தில்லை ராஜன் அந்த நபர் கூறிய வங்கி கணக்கு பல்வேறு தவணைகளில் 19 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து லாபத் தொகையை எடுக்க முயன்ற போது வரி மற்றும் காப்பீட்டு தொகையாக கூடுதல் பணத்தை செலுத்தினால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என மர்ம நபர்கள் கூறியுள்ளனர்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தில்லைராஜன் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விபின் தாஸ்(35), முனாஸ்(38) ஆகிய இருவரும் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.