உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் திகிலூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. முதபாண்டே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியாமத்பூர் இக்ரோடியா சுங்கச்சாவடி அருகே 10-ம் வகுப்பு மாணவனான மோனிஷ் (வயது 16) ஜாமுன் பழங்களை பறிக்க தனது நான்கு நண்பர்களுடன் ஒரு மரத்தில் ஏறியிருந்தார். அப்போது தவறுதலாக அவரது கை மரத்தின் ஒரு பகுதியை தொட, அந்த வழியாகச் செல்லும் 11,000 வோல்ட் உயர் அழுத்த மின்கம்பியைத் தொட்டு தீக்காயம் அடைந்தார்.

மின்சாரம் தாக்கியதால் மோனிஷ் மரத்தில் சிக்கி 10 நிமிடங்கள் உயிருக்கு போராடினார். நண்பர்கள் அங்கு ஓடிச் சென்றனர். அப்பகுதி மக்கள் மின்சார துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னரும், அந்த இளைஞரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லாமல், மக்கள் மூடநம்பிக்கையினால் 35 நிமிடங்கள் சேற்றில் புதைத்தனர். அவரின் முகம் மட்டுமே வெளியே காணப்பட்டதாக கூறப்படுகிறது.

35 நிமிடங்களுக்கு பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனடியாக மோனிஷை சேற்றில் இருந்து மீட்டும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த குடும்பத்தினரும் கிராமவாசிகளும் துயரத்தில் மூழ்கினர்.

இந்த துயர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு,  சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், முறையான மருத்துவ சிகிச்சையை விட்டுவிட்டு மூடநம்பிக்கையை நம்பிய கிராம மக்களின் செயல், இளைஞரின் உயிரை  எடுத்துவிட்டதாக சமூகத்தில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.