வேலூர் சித்தம்பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மூதாட்டி கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் மூதாட்டியின் கழுத்து, வாய், முகத்தில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் மூதாட்டி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.