தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தற்போது புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் பல லட்சக்கணக்கான தொண்டர்களுடன் சிறப்பாக நடைபெற்றது. இதை தொடர்ந்து நடிகர் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்காக தேர்தலுக்கு தயாராவதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். அந்த வகையில் தலைவர் விஜயின் அறிவிப்பின்படி சென்னை மாவட்டத்தில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இணைந்து நடத்தினர். இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் கூறியதாவது, ஆலோசனை கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு அலுவலகத்தின் அறையில் இருந்தபோது 30, 40 பேர் மட்டுமே வந்ததாக கூறினர். ஆனால் எனக்கு தெரியும் சில மணி நேரத்திலேயே இந்தக் கூட்டம் ஆயிரக்கணக்கில் சென்று விடும் என அவர்களுக்கு உறுதி அளித்தேன்.

அதேபோல் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சுமார் 2000, 3000த்திற்கு மேல் தொண்டர்கள் வந்து சிறப்பித்துள்ளனர். தலைவர் விஜயின் கொள்கையின் படி அடிமட்டத்திலிருந்து, மேல்மட்ட பதவி  வரை அனைத்து பதவிகளும் அனைவருக்கும் சமமாக வழங்கப்படும். அதற்காக கட்சிக்கு முழு அர்ப்பணிப்போடு நாம் உழைக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் நமது தலைவரை முதலமைச்சராக பார்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியாக செயல்பட வேண்டும். இவ்வாறு ஆலோசனை கூட்டத்தில் புஸ்லி ஆனந்த் கூறுகிறார்.