குஜராத் மாநிலம் சூரத்தின் ரந்தர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பத்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த 57 வயது நபர் எட்டாவது மாடி ஜன்னல் கம்பிகளில் சிக்கி உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டைம் கேலக்ஸி கட்டிடத்தில் வசிக்கும் நிதின்பாய் அதியா என்பவர், தனது வீட்டின் ஜன்னல் அருகே உறங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகத் தவறி வெளியே விழுந்துள்ளார்.
View this post on Instagram
அப்போது அதிர்ஷ்டவசமாக அவரது கால் எட்டாவது மாடியின் ஜன்னல் கம்பியில் சிக்கிக்கொண்டதால் அவர் அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கினார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கீழே பாதுகாப்பு வலைகளை விரித்ததுடன், ஹைட்ராலிக் கட்டர் கருவிகளைப் பயன்படுத்தி ஜன்னல் கம்பிகளைத் துண்டித்து சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவரைப் பத்திரமாக மீட்டனர்.
பலத்த காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தீயணைப்பு வீரர்களின் துரிதமான மற்றும் உயிரைப் பணையம் வைத்த மீட்புப் பணியைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
