ஈரோட்டில் இருந்து அரசு டவுன் பேருந்து திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கருங்கல்பாளையம் காவிரி ரோடு சோதனை சாவடி பகுதியில் மெதுவாக சென்றது. அதே நேரம் ஈரோட்டில் இருந்து அரசு பேருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சேலம் நோக்கி சென்ற பேருந்து டவுன் பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது.

மேலும் இரண்டு பேருந்துகளில் பயணம் செய்த ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.