திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியம் மேலப்பாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நரேஷ் குமார் (24). இவரும் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணன் என்பவருடைய மகள் சுஷ்மிதாவும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர். காதலர்கள் இரண்டு பேரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் சுஷ்மிதா கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் வீட்டை விட்டு வெளியேறி நரேஷ் குமார் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து இவர்கள் இரண்டு பேருக்கும் வருகிற 12-ம் தேதி பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். திருமணத்திற்கு மூன்று நாட்களே இருக்கின்ற நிலையில் நரேஷ்குமாரின் பெற்றோர் நேற்று திருமணத்திற்கு தேவையான துணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக திருவாரூருக்கு சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த சுஷ்மிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த நரேஷ் குமார் காதலி  தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சந்தேக மரணம் எனும் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.