சென்னையில் ஜனவரி 28-ஆம் தேதி அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர் ஓட்டுநர் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் இ.எம்.ஆர்.ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அதன் மூலமாக 1,200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் 5000 -க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை பொருத்தமட்டில் 160 -க்கும் அதிகமான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதேபோல அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகிறது. இந்நிலையில் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களில் சேர பி.எஸ்.சி நர்சிங், டி.ஜி.என்.எம் அல்லது பி.எஸ்.சி விலங்கியல், நுண் உயிரியல், உயிரி வேதியியல்,தாவரவியல், உயிரி தொழில்நுட்பவியல் படிப்பில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஜி.என்.எம், ஏ.என்.எம், டி.எம்.எல்.டி, போன்ற படிப்புகளை பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் நிறைவு செய்திருத்தல் முக்கியமாகும். மேலும் 19 வயது முதல் 30 வயது குட்பட்டவர்கள் இந்த பணியில் விண்ணப்பித்துக் தெரிந்து கொள்ளலாம். ஓட்டுநர் பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம், பேட்ஜ் வாகன உரிமம் வைத்துள்ள 24 -35 வயதுக்குட்பட்டவர்கள் அந்த பணியில் சேர்ந்து கொள்ளலாம். ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தது மூன்று வருடங்களுக்கும் பேட்ஜ் உரிமம் பெற்று ஒரு வருடம் நிறைவு செய்திருத்தல் அவசியமாகும். இதற்கான எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு மற்றும் நேர்முக தேர்வுகள் திருவல்லிக்கேணி, கஸ்தூர்பா மருத்துவமனை வளாகத்தில் வைத்து சனிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்று அதில் கலந்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள 9154189341, 9154189398, 7397 724807 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.