புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயல் கிராமத்தில் தலித்கள் குடியிருப்பில் குடிநீரில் மனித கழிவை கலந்து மிக கொடூரமான ஒரு விஷயத்தை செய்துள்ளனர். இந்த இழிவான செயலால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் அந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்த முடியுமா? எத்தனை முறை சுத்தம் செய்தாலும் அந்த எண்ண ஓட்டத்தை நம் மனதில் இருந்து அகற்ற முடியாது என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர். அதனால் சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியை இடித்து விட்டு புதிதாக கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதனிடையே மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் நல்ல குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடுகள் முடக்கி விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாருமே கைது செய்யப்படவில்லை என்பதுதான் தற்போது சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க கமிட்டி ஒன்று போடப்பட்டுள்ளது. அதன் அறிக்கை விரைவில் வெளியாகும்.

சட்டப்பேரவையில் இது பற்றி உரிய விளக்கம் அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படாது  பற்றி கேள்வி எழுப்பும்போது இந்த விஷயத்தில் எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் அங்கு வசித்து வரும் மக்களுக்கு இதை யார் செய்திருப்பார்கள் என சரியாக கூற முடியவில்லை. அதேபோல் கோவில்களுக்குள் நுழைய விட மறுப்பது, இரட்டை குவளை முறை பயன்பாடு என்பதெல்லாம் காலம் காலமாக தொடர்ந்து வரக்கூடிய ஒன்று. இதனால் குற்றம் செய்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் இது குறித்து விசாரிக்க அந்த கிராமத்தை சேர்ந்த 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது ஆளுநருக்கு எதிராக 13-ம் தேதி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வேங்கை வயல் சம்பவத்தை கண்டித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 18 அல்லது 19-ஆம் தேதிகளில் தமிழகம் தழுவிய அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் கூறியுள்ளார். இதில் சமூகநீதி கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், பேராசிரியர் முனைவர் ஆர்.ராஜேந்திரன், திரு.கோ.கருணாநிதி, மருத்துவர் திருமதி சாந்தி ரவீந்திரநாத் ஆகிய நான்கு உறுப்பினர்கள் அடங்கிய துணை குழு 13-ம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளது. அத்துடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன்  கலந்துரையாடவும் உத்தேசித்துள்ளது என சமூக நீதி கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.