ஓசூர் இராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட வழங்கப்படும் இட்லி ரப்பர் போல இருப்பதாகவும், 3 நாட்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே உள்ளதாகவும் கூறி ஹோட்டல் உரிமையாளர்களிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஹோட்டலில் சென்ற சில மாதங்களாகவே இது போன்ற இட்லிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த இட்லிகளை சாப்பிடும் பொது மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

அத்துடன் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என கூறி அவர்கள் ஹோட்டல் நடத்துபவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது ஹோட்டல் நடத்துபவர்கள் இந்த இட்லியில் ஆமணக்கு விதை மட்டுமே கலக்கப்படுகிறது என்று தெரிவித்தனர். இதுகுறித்து வாடிக்கையாளர் கூறியதாவது, ஓசூர் பகுதிகளிலுள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் இது போன்ற இட்லிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பொதுமக்களுக்கு பெரிய அளவில் உடல்நல பாதிப்பு ஏற்படும். ஆகவே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் விற்கப்படும் இட்லியின் தரம் பற்றி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.