சென்னையில் சிறப்பு முகாம்கள் வரும் 12ஆம் தேதி முதல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னையில் மழை வெள்ளத்தால் இழந்த ஆவணங்களை பெற டிசம்பர் 12ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் 46 பகுதி அலுவலகங்களில் டிசம்பர் 12 முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆதார் கார்டு, குடும்ப அட்டை, பிறப்பு சான்றிதழ், பள்ளி- கல்லூரி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை பெற சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் வரும் 12ஆம் தேதி முதல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழை வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும்பெறும் வகையில் அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு கட்டணம் இன்றி அதனை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அதனடிப்படையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில் குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வருகிற 11.12.2023 திங்கட்கிழமை அன்றும், சென்னை மாவட்டத்தில் சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் வருகிற 12.12.2023 செவ்வாய்க்கிழமை அன்றும் தொடங்கப்படும்.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்து அறிவிப்பு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும். மேற்படி சிறப்பு முகாம்களில் பொதுமக்களின் வசதிக்கென இ சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.