கடலூர் மணியம் ஆதூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சைலேஷ். இவர் முகநூலில் வேலைநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ஆவடி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்நிறுவனத்தில் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த சையத்மின் ஹாஜீதீன் உள்ளிட்ட சிலர் சைலேஷிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சொல்லி ரூபாய் 3 லட்சத்தை கேட்டிருக்கின்றனர்.

அதன்படி சைலேஷ் கடந்த வருடம் ரூபாய் 3 லட்சத்தை கொடுத்து இருக்கிறார். எனினும் வெளிநாட்டில் வேலை வாங்கி தராததால் சைலேஷ் நேரில் சென்று தான் கொடுத்த பணத்தை அவர்களிடம் திருப்பி கேட்டுள்ளார். எனினும் அவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதால் சைலேஷ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோசடி தொடர்பாக சையத்மின் ஹாஜீதீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் இவர் ஒரு குழுவாக செயல்பட்டு ஒரு போலியான நிறுவனத்தை நடத்தியதும், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சொல்லி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் அதிகமானவர்களிடம் ரூபாய் 91 லட்சத்திற்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. கைதான சையத்மின் ஹாஜீதீனை காவல்துறையினர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைச்சாலையில் அடைத்தனர்.