கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு போங்கின்காலை பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பினுஷியா இம்மாலின்(7) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி 1 1/2 வயதில் இருந்தே நோய்வாய்ப்பட்டு மனநலம் குன்றியவராக இருந்தார். இதனால் சிறப்பு பள்ளியில் பினிஷியா இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் பினுஷியா வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியை தேடி பார்த்தனர்.

அப்போது ஒரு முதியவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் குளக்கரையில் சிறுமி நின்றதை பார்த்ததாக தெரிவித்தார். உடனே பதறியடித்து அங்கு சென்ற குடும்பத்தினர் பினுஷியா தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.