சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை பகுதியில் பெயிண்டரான அர்ஜுன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. இவரது பக்கத்து வீட்டில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். மணிகண்டனுக்கு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டு வாசலில் மது பாட்டில்கள் கிடந்ததை பார்த்த மணிகண்டனும் அவரது மனைவி ராஜேஸ்வரியும் அர்ஜுனன் குடித்துவிட்டு மது பாட்டில்களை வீசி இருக்கலாம் என சந்தேகப்பட்டனர். இதுகுறித்து அர்ஜுனிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் கோபமடைந்த கணவன் மனைவி இருவரும் கட்டை மற்றும் மது பாட்டில்களால் அர்ஜுனை சரமாரியாக தாக்கினர். இதனால் படுகாயமடைந்த அர்ஜுன் மயங்கி விழுந்தார். ஆனாலும் கோபத்தில் மணிகண்டனும் அவரது மனைவியும் கொதிக்கும் வெந்நீரை எடுத்து அர்ஜுன் மீது ஊற்றியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அர்ஜுன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மணிகண்டன், ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.