கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பிரிவு லட்சுமி நகரில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் சேலத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனார்த்தனன் வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கிய பணத்தை நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தாமல் தனது வங்கி கணக்கில் செலுத்தியதாக தெரிகிறது. லோகேஸ்வரன் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது 20 லட்சம் ரூபாய் குறைந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் ஜனார்த்தனன் தான் பணத்தை மோசடி செய்தது உறுதியானது. அவரிடம் கேட்டதற்கு பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டார். அதன்படி ஜனார்த்தனன் 13 லட்சம் ரூபாய் பணத்தை மட்டுமே நிறுவனத்தினரிடம் கொடுத்துள்ளார் மீதமுள்ள ஏழு லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்கவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்கும் ஜனார்த்தனன் பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக லோகேஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.