சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2000-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்து விலங்குகளை பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் கடந்த எட்டு நாட்களில் உயிரியல் பூங்காவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து பூங்காவில் உள்ள விலங்குகளை சுற்றி பார்த்து ரசித்தனர்.

நேற்று ஆண்டின் கடைசி நாளை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்தும் காலை முதல் மக்கள் கூட்டம் கூட்டமாக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் குறிப்பாக பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகள், வெள்ளைப் புலி, மனித குரங்குகள் போன்ற விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள இடங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் நின்று பார்த்து ரசித்தனர். இந்நிலையில் பூங்காவில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பூங்கா நிர்வாகம் செய்துள்ளனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு கடந்த எட்டு நாட்களில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர். இந்த பூங்காவிற்கு வரும் பொது மக்களிடம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கும்படி ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று பூங்காவிற்கு ஏராளமான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம் என கூறியுள்ளார்.