வானிலை ஆய்வு மையம் வெளியிடுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, நேற்று தென்கிழக்கு வங்கு கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 30.1.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து 1.2.2023 அன்று இலங்கை கடற்கரை பகுதிகளை சென்றடைய கூடும்.

இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் வருகிற 29,30 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 31-ஆம் தேதி ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனையடுத்து தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் வருகிற 1-ம் தேதி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 2-ம் தேதி சென்னை தென் தமிழக மாவட்டங்கள் அனேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.