சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோட்டையூரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கையில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் முத்துக்குமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் லண்டனில் இருந்து பேசுவதாக கூறினார். அடிக்கடி இருவரும் செல்போனில் பேசி நண்பர்கள் ஆகினர். அந்த நபர் முத்துக்குமாருக்கு பரிசு பொருட்கள் அனுப்புவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து பேசிய ஒருவர் முத்துக்குமாரை தொடர்பு கொண்டு உங்களுக்கு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வந்துள்ளது. அதற்கு சுங்கவரி கட்ட வேண்டும் எனக் கூறி 2 தவணைகளாக 7 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். அதன் பிறகு அவர்கள் முத்துக்குமாரை தொடர்பு கொண்டு பேசவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துக்குமார் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.