திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜங்களாபுரம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சசிகுமார் அய்யனூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறினார். இந்நிலையில் சசிகுமார் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மூலம் ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மளிகை கடைகளுக்கு மளிகை பொருட்களை சில்லறை விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று விற்பனை முடிந்து சசிகுமார் வீட்டிற்கு வந்தார். பின்னர் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளுக்கு சார்ஜ் போட்டார். அப்போது ஸ்கூட்டரில் இருந்து சிறிதாக புகை வந்தது.

உடனடியாக சசிகுமார் மின் இணைப்பை துண்டிக்க முயன்றார். அதற்குள் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. பின்னர் சசிகுமார் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மின் இணைப்பை துண்டித்து தண்ணீர் ஊற்றி மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்தார். ஆனால் இந்த தீ விபத்தில் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. சரியான நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.