திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாணியம்பாடி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் மோகன் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனாலும் வேலை செய்வது போன்று நடித்து பல்வேறு இடங்களில் தெருக்களில் குப்பை அள்ளுவது போல ஆங்காங்கே பெண்களிடம் மோகன் முறைகேடாக நடந்து கொண்டதாக தெரிகிறது.

நேற்று வாணியம்பாடி பகுதியில் மோகன் குப்பை அள்ளுவது போல சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஒரு பெண்ணின் கையைப் பிடித்து மோகன் இழுத்தார். இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவரும், உறவினர்களும் இணைந்து மோகனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் மோகன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மோகனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.