இதுதான் எங்கள் தோல்விக்கு காரணம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்..

2023 ஐசிசி உலக கோப்பையில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 191 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்களும், முகமது ரிஸ்வான் 49 ரன்களும், இமாம் உல் ஹக் 36 ரன்களும், அப்துல்லா ஷபீக் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீவ் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் 30.3 ஓவர்களில் 192 ரன்கள் என்ற இலக்கை துரத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா (86) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (53*) ஆகியோர் சிறப்பாக ஆடினர். மேலும் கே.எல் ராகுல் 19* ரன்களும், சுப்மன் கில் மற்றும் விராட் கோலி தலா 16 ரன்களும் எடுத்தனர்.. பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. மேலும் இதன் மூலம் ஒருநாள் உலக கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது இந்திய அணி (8-0).

இந்நிலையில் தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது, “நாங்கள் நன்றாகத் தொடங்கினோம். எனக்கும் இமாமுக்கும் இடையே நல்ல பார்ட்னர்ஷிப் இருந்தது. நாங்கள் சாதாரண கிரிக்கெட்டை (நானும் ரிஸ்வானும்) விளையாட விரும்பினோம். திடீரென்று எங்களுக்கு ஒரு சரிவு ஏற்பட்டது, சரியாக முடிக்கவில்லை”

“நாங்கள் தொடங்கிய விதம், 280-290 ரன்களை இலக்காகக் கொள்ள விரும்பினோம். பந்துவீச்சில் புதிய பந்தில் நாங்கள் நன்றாக செயல்படவில்லை. ரோஹித் விளையாடிய விதம், அவர் ஒரு சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். நாங்கள் விக்கெட் வீழ்த்த முயற்சித்தோம், ஆனால் அது நடக்கவில்லை” என்று கூறினார்.

இதற்கிடையே போட்டிக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் மகிழ்ச்சியாக பேசினார். அதோடு கோலியிடம் கையெழுத்திட்ட ஜெர்சியைக் கேட்ட்டார். பாபர் கேட்டதால் கோலி  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், மேலும் அதில் கையெழுத்திட்ட பிறகு உடனடியாக தனது ஜெர்சியை அவருக்கு வழங்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..