இந்தியாவின் பல நகரங்களில் இந்தியாவின் வெற்றியை மக்கள் ஆட்டம்போட்டு கொண்டாடும் வீடியோ வைரலாகி வருகிறது..

2023 ஐசிசி உலக கோப்பையில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 2 மணிக்கு மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 191 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்களும், முகமது ரிஸ்வான் 49 ரன்களும், இமாம் உல் ஹக் 36 ரன்களும், அப்துல்லா ஷபீக் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீவ் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் 30.3 ஓவர்களில் 192 ரன்கள் என்ற இலக்கை துரத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா (86) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (53*) ஆகியோர் சிறப்பாக ஆடினர். மேலும் கே.எல் ராகுல் 19* ரன்களும், சுப்மன் கில் மற்றும் விராட் கோலி தலா 16 ரன்களும் எடுத்தனர்.. பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. மேலும் இதன் மூலம் ஒருநாள் உலக கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது இந்திய அணி (8-0).

இந்திய அணி வெற்றிபெற்ற பின் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்த 1,00,000 ரசிகர்கள்  ‘வந்தே மாதரம்’ பாடி கொண்டாடினர். இந்தவீடியோவை பார்க்கும் போது கூஸ்பம்ப்ஸ் உணர்வை தருகிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதேபோல இந்தியாவின் பல நகரங்களில் இந்தியாவின் வெற்றியை மக்கள் கையில் தேசிய கொடியுடன் இரவு பட்டாசு வெடித்து, வானவேடிக்கை நிகழ்த்தி ஆட்டம் போட்டு சாலையில் கொண்டாடி மகிழ்ந்தனர். அதாவது, அகமதாபாத், ஜம்மு காஷ்மீர், கோலாப்பூர், கொல்கத்தா, புனே உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கொண்டாடி வருகின்றனர்.  இந்த வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.