இந்தியாவில் பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களிலும் தீவிரவாத அச்சுறுத்தல் என்பது சற்று அதிகம். இந்த இரு மாநிலங்களும் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்திருப்பதால் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் அரங்கேறும். இந்நிலையில் தற்போது பஞ்சாபில் உள்ள பதிண்டா பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமில் இன்று காலை 4.30 மணி அளவில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த சத்தத்தை கேட்டு மற்ற ராணுவ அதிகாரிகள் அங்கு சென்றபோது 4 ராணுவ வீரர்கள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பஞ்சாபில் உள்ள அனைத்து ராணுவ முகாம்கள் மற்றும் காவல் நிலையங்களை அலர்ட் ஆகும்படி அறிவுறுத்தியுள்ளனர். அதிகாலை நேரத்தில் திடீரென ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு நடந்ததால் இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்ற நோக்கத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பஞ்சாப் மாநிலம் முழுவதும் தற்போது பாதுகாப்புக்காக இராணுவத்தினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.