பொதுவாக பாம்பைக் கண்டாலே படையும் நடுங்கும் என்பார்கள், அதுவும் உலகின் மிக விஷத்தன்மை கொண்ட ராஜநாகம் (King Cobra) என்றால் கேட்கவே வேண்டாம். அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள ஒரு ஆற்றுக்குள் இருக்கும் பிரம்மாண்டமான ராஜநாகத்தின் வாலைப் பிடித்து ஒரு நபர் வெளியே இழுக்க முயல்கிறார்.

இதனால் கோபமடைந்த அந்த பாம்பு, உடனே தனது படமெடுத்து அந்த நபரைத் தாக்கப் பாய்கிறது. அதிர்ஷ்டவசமாக அந்த நபர் சரியான நேரத்தில் பிடியை விட்டதால் உயிர் தப்புகிறார்.
ஆனாலும், விடாக்கண்டனாக அந்த பாம்பு காட்டுக்குள் தப்பிச் செல்ல முயலும்போது மீண்டும் அதன் வாலைப் பிடித்து இழுப்பது பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கிறது.

​இந்த திகிலூட்டும் வீடியோ எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த நபர் ஒருமுறை கூட இமைகொட்டாமல் அந்தப் பாம்பின் கண்களையே நேருக்கு நேர் பார்த்தபடி அமைதியாகக் கையாள்வது காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.

வீடியோவைப் பார்த்த பலரும், “இது என்ன தைரியமா அல்லது தற்கொலை முயற்சியா?” என்று அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். எவ்வளவுதான் அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும், இப்படி ஒரு ஆபத்தான உயிரினத்துடன் விளையாடுவது உயிரைப் பறிக்கும் செயலாகும் என்று பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.