இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லோம்போக் தீவில், இரண்டு குரங்குகள் பீர் பாட்டில்களை கைகளில் வைத்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. மேற்கு நுசா தெங்காராவின் குட்டா கடற்கரைக்கு அருகே உள்ள பாறைப் பகுதியில் அமர்ந்திருந்த இந்த இரண்டு குரங்குகளும், பீர் பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தப்படும் பச்சை மற்றும் பழுப்பு நிறக் கண்ணாடி பாட்டில்களை மனிதர்களைப் போலப் பிடித்துக் கொண்டிருந்தன. அந்தப் பகுதிக்குச் சுற்றுலா சென்ற கிளாரி ஹேன்சன் என்ற பயணியால் எடுக்கப்பட்ட இந்த அசாதாரணக் காட்சியை, சர்வதேச ஊடகமான ஏபிசி நியூஸ் (ABC News) ஒளிபரப்பியது.
அதன் பின்னர் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு குரங்கு பாட்டிலை எடுத்துத் தனது வாய்க்கு அருகில் கொண்டு செல்லும் காட்சியும், அதை அருகில் இருக்கும் சுற்றுலாப் பயணிகள் வேடிக்கை பார்க்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. அந்த பாட்டில்களில் மது இருந்ததா அல்லது காலி பாட்டில்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், குரங்குகளின் கைகளில் பீர் பாட்டில்கள் இருக்கும் இந்த விசித்திரக் காட்சி பார்ப்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
Two monkeys were spotted drinking from what appeared to be beer bottles on the island of Lombok, Indonesia, and onlookers couldn’t believe their eyes. pic.twitter.com/db66OJnYso
— ABC7 Eyewitness News (@ABC7) June 11, 2026
இந்தச் சம்பவம், சுற்றுலாத் தலங்களில் மனிதர்கள் வீசிச் செல்லும் குப்பைகளால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவாதத்தை மீண்டும் உலுக்கியெடுத்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில் உள்ள விலங்குகள், மனிதர்கள் வீசி எறியும் உணவுகளையும் பொருட்களையும் தேடி உண்ணப் பழகிவிடுவதாகவும், இதனால் அவை உயிருக்கே ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு ஆளாக நேரிடுவதாகவும் வனவிலங்கு நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இந்த வீடியோவைப் பார்த்த சமூக வலைதளவாசிகள் பலர் தங்களது ஆழ்ந்த கவலையையும், மனிதர்களின் பொறுப்பற்ற செயலுக்குக் கடுமையான கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். “இது பார்ப்பதற்குச் சிரிப்பாகத் தோன்றினாலும், உண்மை அதுவல்ல; விலங்குகள் தங்களுக்குக் கிடைக்கும் எதையும் உண்ணும் இயல்புடையவை என்பதால் அவை எளிதாகப் பாதிக்கப்படுகின்றன” என்றும், “இது நகைச்சுவையானது அல்ல, அவர்களுக்குப் பழங்கள் தேவை, யாராவது அந்த பாட்டில்களை வாங்கியிருக்க வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
